Publish Date: Thu, 14 Dec 2017 (17:34 IST)
Updated Date: Thu, 14 Dec 2017 (17:36 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாக விசாரணை ஆணையத்திடம் தீபா கூறியுள்ள நிலையில், சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த தீபாவின் தம்பி தீபக் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த புகைப்படமும் கடைசி வரை வெளியிடப்படவில்லை.
இதனால் அனைவருக்கும் அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையும் ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்த அனைவரையும் விசாரித்து வருகிறது.
இதனடிப்படையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜராகினார். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதனையடுத்து சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த தீபாவின் தம்பி தீபக் இன்று விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகினார். சுமார் 4 மணி நேரம் தீபக்கிடம் விசாரணை நடத்தியுள்ளார் ஆறுமுகசாமி.
அதன் பின்னர் விசாரணை குறித்து விளக்கம் அளித்த தீபக், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்குள் இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் விளக்கியுள்ளேன். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் ஏற்படும் அனைவரிடமும் கட்டாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.