கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இம்முறை அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுவது அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதுதான். கோலியை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்கள் பலரும் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், தற்போது அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் ஆர் சி பி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தோள்பட்டை வலி காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல அந்த அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்களான ஃபில் சால்ட், ஜோசப் பீத்தல் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதாரும் தற்போது காயமடைந்துள்ளார். அதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அப்படியே விளையாடினாலும் இம்பேக்ட் ப்ளேயராகதான் விளையாடுவார் என்றும் அணியின் புதிய கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா நியமிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.