நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பரிதாபகரமான நிலையில் இருக்கும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணியை விட பரிதாபகரமான நிலையில் இருக்கிறார் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதுவரை நடந்த எல்லா போட்டிகளிலும் இம்பேக்ட் ப்ளேயராக மட்டுமே களமிறக்கப்படும் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
எல்லா போட்டிகளிலும் வருவதும் இரண்டு சிக்ஸர்கள் அடிப்பதும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் வெளியேறுவதுமாக இருக்கிறார். நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதுதான் நடந்தது. 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்து வெளியேறினார். இதில் கொடுமை என்னவென்றால் அவர் அவுட்டானது கம்மின்ஸ் வீசிய ஒரு லோ புல்டாஸ் பந்து. வழக்கமாக இந்த பந்துகளை ரோஹித் சிக்ஸருக்குப் பறக்க விடுவார். ஆனால் அவரின் மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது அவர் சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் ரோஹித்தின் ஆட்டம் பற்றி பேசிய முகமது கைஃப் “அவரின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் முதலில் தடுமாறினார். பின்னர் சிக்ஸர்கள் விளாசினார். அதன் பின்னர் லோ புல்டாஸில் அவுட்டாகிறார். அவரிடம் அதிரடியாக ஆடவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அவர் தற்போது ஃபார்மிலும் இல்லை. அதனால்தான் இப்படி ஆட்டமிழக்கிறார்” எனக் கூறியுள்ளார்.