Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த நிலையில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆனால் இரண்டாம் நாள் முடிவில் அவருடைய தாயார் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரைப் பார்க்க அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை கிளம்பி சென்றார். மூன்றாம் நாளில் அவர் விளையாடவே இல்லை.
இதையடுத்து நான்காம் நாள் அவர் விளையாட தொடங்கினார். இந்திய அணி பந்துவீசிய போது அவருக்கு 28 ஓவர்கள் வரை ஓவரே வழங்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் ஐசிசி விதிதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஒரு வீரர் களத்தில் இருந்து வெளியேறி மீண்டும் இணையும் போது அவர் எவ்வளவு ஓவர்களுக்கு களத்தில் இல்லையோ, அதே அளவுக்கு மீண்டும் பீல்ட் செய்த பின்னர்தான் அவருக்கு ஓவர் வழங்கமுடியும். அதனால்தான் கேப்டன் ரோஹித் ஷர்மா அவருக்கு ஓவர் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.