Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
கோ பூஜை: பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.
கோ பூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். நீண்டகால மனக்குறைகள் விலகும். கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும், நம்பிக்கையும் முக்கியமாகும். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
முதலில் பசுவை அழைத்து வர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும். பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும். பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.
நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும். கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.
108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும். பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல கோமாதாவை முப்பெரும் தேவியாக பாவனை செய்து 108, 1008 போற்றித் துதிகளை உச்சரித்தும் வழிபடலாம்.
இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.