Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை இளம் தலைமுறை மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதைத் தொடர்ந்து உணவும் வாழ்க்கையும் இயற்கையின் பக்கமாகத் திரும்பிருக்கின்றது. ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எளிய யோகா பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மனதுக்குத் தியானம், வயிற்றுக்கு உணவு, உடலுக்கு யோகாசனங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது. யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம் நிலவுகிறது. ‘தியானம், சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் தான் கைவரும். நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எல்லாம் தியானம் செய்ய முடியாது’ என்று கருதுகின்றனர்.
ஒருவருக்கு தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில் உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது. நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டியதன் அவசியம் புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும்.
மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது.
மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது.