Publish Date: Sat, 15 Oct 2022 (14:41 IST)
Updated Date: Sat, 15 Oct 2022 (14:45 IST)
புரட்டாசி சனியன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். பகலில் மதியம் மட்டும் எளிய உணவு உண்ண வேண்டும். காலை, இரவில் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
பகலில் விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் (108 போற்றி) படிக்க வேண்டும். பெருமாளுக்கு நைவேத்யமாக துளசி தீர்த்தம், இளநீர், தயிர்,பழங்கள் படைத்து வழிபட வேண்டும். இந்த விரதம் மேற்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். குறிப்பாக சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் அகலும். வறுமை நீங்கி செல்வவளம் பெருகும்.
இரவில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு நெய் தீபமும், சனீஸ்வரருக்கு எள்தீபமும் ஏற்றி வழிபட வேண்டும்.
புரட்டாசி சனியன்று "ஓம் நாராயணாய நம" என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லவேண்டும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.
அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூ லோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.