Publish Date: Fri, 23 Sep 2022 (12:10 IST)
Updated Date: Fri, 23 Sep 2022 (12:15 IST)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் “அவதார் 2” வெளியாக உள்ள நிலையில் அந்த கதையை குப்பையில் தூக்கிப் போட்டதாக அவர் கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் அவதார். உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதி “அவதார் 2” வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வைரலாக இருந்து வருகிறது. 24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை அவதார் 2 டீசர் பெற்றது.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் “அவதார் பட வெற்றிக்கு பிறகு “அவதார் 2” க்காக திரைக்கதையை எழுத தொடங்கினேன். நீண்ட காலமாக அந்த திரைக்கதையை எழுதினேன். அதை முழுமையாக முடித்ததும் குப்பை தொட்டியில் வீசிவிட்டேன். பிறகு மீண்டும் எழுதினேன்” என கூறியுள்ளார்.
5 பாகமாக வெளியாக உள்ள அவதார் படத் தொடரில் 3வது பாகத்திற்கான படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும், 4ம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சமீப காலமாக ஹாலிவுட் படங்கள் மக்களிடையே மவுசு இழந்து வரும் நிலையில் அதை மாற்றியமைக்கும் வகையில் அவதார் 2 இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.