குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள ஜூனிகர்ஹி பகுதியில், இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள பதிவு ஒன்று, இந்த மோதலுக்கு காரணமாக அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூனிகர்ஹியைச் சேர்ந்த ஒரு இளைஞர், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த பதிவில், முஸ்லிம் வழிபாட்டு தலமான மசூதியை பற்றிய ஆட்சேபனைக்குரிய தகவல்கள் இருந்தன. இதனால் கோபமடைந்த முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக, இந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள் வீசி தாக்கிக் கொண்டதுடன், அப்பகுதியில் இருந்த வாகனங்கள் மற்றும் கடைகளையும் அடித்து நொறுக்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வன்முறை தொடர்பாக, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.