கர்நாடக ஆளுநரான தாவர்சந்த் கெலாட்டின் பேரன் தேவேந்திர கெலாட்டின் மனைவி திவ்யா கெலாட், தன் கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, குடும்ப வன்முறை மற்றும் மைனர் மகளை கடத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் காவல் கண்காணிப்பாளரிடம் திவ்யா எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளார். தன் கணவர் தேவேந்திர கெலாட், முன்னாள் எம்.எல்.ஏ.வான மாமனார் ஜிதேந்திர கெலாட் உட்பட நான்கு பேர், பல ஆண்டுகளாக ரூ. 50 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவருக்கு மது மற்றும் போதைப் பழக்கங்கள் இருந்ததாகவும் திவ்யா குற்றம் சாட்டினார்.
திவ்யா, ஜனவரி 26 அன்று கணவர் தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாகவும், அதில் தான் முதுகில் பலத்த காயமடைந்ததாகவும் கூறினார். மேலும், அவருடைய 4 வயது மகளை மாமனார் குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பதாகவும், குழந்தையை பார்க்க அனுமதி மறுப்பதாகவும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல் துறையினர் புகாரை ஏற்று உஜ்ஜைன் காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜிதேந்திர கெலாட் மறுத்துள்ளார்.