Publish Date: Sat, 31 Aug 2019 (19:05 IST)
Updated Date: Sat, 31 Aug 2019 (19:07 IST)
முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறந்துவிடும் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றபோது ட்ரோன் உபயோகித்தது குறித்து கேரள வனத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
தேனி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேக்கடி பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்துவிட்டார். பிறகு அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்களிடம் பேசினார். இந்த விழாவில் ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத் குமாரும் கலந்து கொண்டார்.
துணை முதல்வர் பங்கேற்ற விழாவை வீடியோ பதிவு செய்ய பறக்கும் ட்ரோன் வகை கேமராவை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த பகுதி கேரள வனத்துறைக்கு உட்பட்ட பகுதி மற்றும் புலிகள் சரணாலயம் உள்ள பகுதி என்பதால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ட்ரோன் போன்ற பறக்கும் கேமராக்களை பயன்படுத்தியது குறித்து சரியான விளக்கம் தர வேண்டும் என சரணாலய இணை இயக்குனர் ஷில்பா குமார் தமிழக பொதுப்பணி துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்த பொதுப்பணி அதிகாரிகள் தாங்கள் எந்த ட்ரோன் காமராவையும் ஏற்பாடு செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.