Publish Date: Tue, 28 Aug 2018 (11:10 IST)
Updated Date: Tue, 28 Aug 2018 (11:22 IST)
கோத்தகிரியில் போதை தலைக்கேறிய நிலையில் வாலிபர் ஒருவர் தனது தந்தையையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவால் ஏரளமான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. குடிப்பழக்கத்தால் பலர் தங்களது வீடு வாசல்களை இழக்கின்றனர். சமீபகாலமாக குடிகாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி பேட்ரிக் (75). இவரது மகன் நெல்சன் ரிச்சர்டு. நெல்சன் தச்சு வேலை செய்து வருகிறார். குடிகாரரான நெல்சன் அவ்வப்போது குடித்துவிட்டு தந்தையிடம் சண்டையிட்டு வந்துள்ளார். குடிப்பழக்கத்தை விட்டுவிடும்படி ஆண்டனி எவ்வளவு கூறியும் நெல்சன் கேட்கவில்லை
இந்நிலையில் நெல்சன் நேற்று முன்தினம் போதை தலைக்கேறிய நிலையில், தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் நெல்சன் தந்தை என்றும் பாராமல் ஆண்டனியை வெட்டி கொன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஆண்டனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நெல்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனே தந்தையைக் கொன்ற சம்பவம் கோத்தகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.