Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
தமிழகத்தில் உள்ள ஆக்ஸிஜனை மத்திய அரசு தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு அளித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் முடிவெடுக்கும் முன்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.