Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது.
இரட்டை இலை கிடைக்கும் அணிக்கே தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதால் தினகரன் மற்றும் எடப்பாடி அணி இரண்டும் இந்த சின்னத்தை பெற கடுமையாக வாதம் செய்தன. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். மற்றும் தினகரன் அணியினர் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்ததை அடுத்து, ஏழு முறை இருதரப்பையும் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பை நேற்று வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் அணிக்கே ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரம்மாணப் பத்திரங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் ஆதரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இரட்டை இலையை முடக்கி மார்ச் 22ம் தேதி அறிவிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதோடு, அதிமுக என்ற கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி அணி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.