நெல்லை மாவட்ட காவல்துறையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 217 பேர் கை கால்களில் காயமுற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
"குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" என்று ஆட்சி அமைக்கும் முன் வீர வசனம் பேசிவிட்டு, ஆட்சி அரியணை ஏறியதும் குற்றங்கள் நிகழாது தடுப்பதைவிட்டு, குற்றம் புரிந்ததாக சந்தேகப்படும் நபர்களை அடித்து அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?
கடந்த 2023 ஆம் ஆண்டில் குற்றவாளிகளின் பற்களை உடைத்ததால் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்பும், இன்றுவரை நெல்லை காவல்துறையினர் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்? மக்களை காக்க வேண்டிய காவல்துறை, திமுகவினர் குற்றம் புரியும் போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜகத் துறையாகவும் மாறுவது ஏன்?
இப்படி தொடர்ந்து கட்டுக்கடங்காமல் குரூரபோக்குடன் செயல்படும் காவல்துறையால் மேலும் பல அப்பாவி அஜித்குமார்கள் பலியாக நேரிடுமே தவிர, பொதுமக்களின் பாதுகாப்பு என்றும் மேம்படாது என்பதை சட்டம் ஒழுங்கை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்!