Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
பம்மல் பகுதி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் ஆதிமூலத்தின் நடவடிக்கை காரணமாக பம்மல் பகுதியில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னையின் பல இடங்களிலும் வழிப்பறி, செயின் பற்றி, திருட்டு மற்றும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் நடந்து மற்றும் வாகனத்திலும் செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை இரு சக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் பறித்து செல்வதும், அப்போது அப்பெண்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் வீடியோவாக சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, இதை தடுப்பதற்காகவும், அப்படி குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காகவும், பொதுமக்கள் தங்கள் தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல் அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனாலும், பொதுமக்களிடையே இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், பம்மல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் ஆதிமூலம் அந்த பகுதி மக்களிடையே சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு சீட்டுகளை வழங்கினார். அதன் விளைவாக தற்போது பம்மல் பகுதியில் 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் ஆய்வாளர் ஆதிமூலத்தை பாராட்டி வருகின்றனர். தற்போது திருட்டு பயம் இல்லாமல் நடமாட முடிகிறது எனவும் கருத்து தெரிவித்தனர்.