Publish Date: Thu, 28 Dec 2017 (14:05 IST)
Updated Date: Thu, 28 Dec 2017 (14:10 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவி என அழைத்தனர் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும். அவரது மறைவிற்கு பின்னர் அவரது அரசியல் வாரிசு யார் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனையடுத்து பலரும் அரசியலில் ஜெயலலிதா வகித்த இடத்தை பிடிக்க கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலரும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஊடக வெளிச்சத்துக்கு வந்து அரசியல் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை கூறி வருகிறார். அதே போல செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்துகிறார். இதனையடுத்து கிருஷ்ணபிரியாவின் ஆதரவாளர்கள் அவரை அடுத்த புரட்சித்தலைவி எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு அளிக்கப்படும் பட்டம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ள கிருஷ்ணபிரியா, தன்னை அப்படி கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அந்த பதிவில், அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள், தாங்கள் எந்த பட்டத்தையும் எனக்கு அளிக்க வேண்டாம், நான் அவற்றை விரும்பமாட்டேன். சகோதரி என்று அழைத்து என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைப்பதையே நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.