முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோர்களின் சமாதிகளில் உள்ள நினைவிடங்களில் குண்டு வீச முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான முத்துச்செல்வன் என்பவர் ஆவார். அவர் நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முத்துச்செல்வன் அளித்த வாக்குமூலத்தில், "இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து புத்தகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த நோக்கத்தில் கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தேன்" என தெரிவித்துள்ளார்.
"கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றபோது மாட்டிக் கொண்டேன்" என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலம் போலீசாரிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், முத்துச்செல்வன் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் அளித்ததாகவும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, அவரை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.