Publish Date: Fri, 20 Apr 2018 (09:01 IST)
Updated Date: Fri, 20 Apr 2018 (09:06 IST)
கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியின் ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த காவல்துறை அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் தங்கள் விசாரணைய தொடங்கினர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவிகளிடம் நிர்மலா தேவி செய்த வாட்ஸ்-அப் உரையாடல்களை ஒரு தனியார் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. அதில், மாணவிகளை விடாமல் அவர் துரத்தும் வாட்ஸ்-அப் உரையாடல்கள் வெளியானது.
அவரை கைது செய்த போது அவரிடம் எந்த வசதியும் இல்லாத ஒரு சிறிய செல்போன் மட்டுமே இருந்ததாம். மேலும், மாணவிகளிடம் அவர் பேசிய எண்ணிற்கான சிம் கார்டும் அதில் இல்லாமல், அது வேறு எண்ணாக இருந்ததாம். அதன் பின், தலையனை அடியில் அவர் மறைத்து வந்திருந்த ஸ்மார்ட்போனை செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
வாட்ஸ்-அப் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது என்பதால், பெரும்பாலும், மாணவிகளிடம் வாட்ஸ்-அப் கால் மூலமாகவே நிர்மலா தேவி பேசியிருக்கிறார். அதில் இருந்த உரையாடல்களை பிரிண்ட் அவுட் எடுத்த போலீசார் அதில் ஒரு காப்பியை சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அது மொத்தம் 350 பக்கங்கள் இருந்ததாக தெரிகிறது.
அவரது செல்போனில், சில மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் தனிப்படத்தை அவர் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே, மாணவிகளின் புகைப்படத்தை அனுப்பி சம்மதம் வாங்கிய பின்பே, அவர் அவர்களை வளைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் அனுப்பிய அந்த எண்கள் போலீ முகவரியில் இருப்பதால், செல்போனின் ஐ.எம்.இ எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வருடங்களாக அவர் யாரிடமெல்லாம் அதிகமாக செல்போனில் பேசியிருக்கிறார், வாட்ஸ்-அப் உரையாடல்கள் செய்திருக்கிறார் என்கிற தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர். அனைத்து பணிகளும் முடிந்த பின் விசாரணை வேகமெடுக்கும் எனக் கூறப்படுகிறது.
webdunia
Publish Date: Fri, 20 Apr 2018 (09:01 IST)
Updated Date: Fri, 20 Apr 2018 (09:06 IST)