எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி மற்றும் ஆட்சி இரண்டும் செயல்பட துவங்கியதால் அதில் அதிருப்தியடைந்து அவருக்கு எதிராக செயல்பட துவங்கினார் ஓ.பன்னீர்செல்வம். எனவே அவரை அதிமுகவிலிருந்து வெளியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தங்களை அதிமுகவினர் என்று சொல்லிக் கொண்டாலும் தனியாக செயல்பட்டு வருகிறார்கள். ஒருபக்கம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை தொடங்கி செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.
இந்நிலையில்தான் நேற்று அவர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் இன்று அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள். உங்களுடன் இருந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறி வேறு கட்சிக்கு சென்று விட்டார். அவர் உங்களுடன் பேசினாரா? என கேட்டதற்கு அவரும் என்னிடம் பேசவில்லை. நானும் அவருடன் பேசவில்லை என பதில் சொன்னார் ஓபிஎஸ்.
அரசியலில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்று கேட்டதற்கு அதிமுக தொண்டர்களின் முடிவு, அவர்களின் மனநிலை மற்றும் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பது போல எனது முடிவு அமையும் என்று கூறினார் ஓபிஎஸ். யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்? என்று கேட்டதற்கு தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது.. பொறுமையாக இருங்கள் என்று சொன்னார்.
அடுத்தது நீங்களும் டிடிவி தினகரனும் தனியாக செயல்பட்டு வருவகிறீகளே? என்று கேட்டதற்கு எங்களின் நோக்கம் ஒன்றுதான். அதிமுக ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை.. இதுபற்றிதான் நான் அமித்ஷாவிடம் பேசியிருக்கிறேன் என்று கூறினார் ஓபிஎஸ்.