Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 7 முனை போட்டி உருவாகியுள்ளது.
அந்த தொகுதியில் இன்றோடு வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சுயேட்சையாக தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் களம் இறங்கவுள்ளனர்.
இதில் மருதுகணேஷ், மதுசூதனன், தினகரன் ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், மற்ற நான்கு பேரும் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். எனவே, ஆர்.கே.நகரில் 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டாலும், எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது மக்களுக்குள்ள அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகள் கூறி வருகின்றனர். அந்த அதிருப்தி ஓட்டுகள் நிச்சயம் திமுகவிற்கே பெரும்பாலும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர் தினகரனுக்கு ஓட்டு போடவும் வாய்ப்புள்ளது. இவர்கள் மூவருக்கும்தான் முக்கிய போட்டி என்றாலும், இவர்கள் மூவரில் யாரையும் பிடிக்காதவர்கள் தீபா, விஷால், பாஜக, நாம் தமிழர் ஆகியோரில் யாருக்கேனும் வாக்களிப்பார்கள் எனத் தெரிகிறது. அது போக நோட்டோவும் உண்டு.
எனவே, மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.