மோடியின் திட்டத்துக்கு ரஜினிகாந்த் பகிரங்க ஆதரவு!
மோடியின் திட்டத்துக்கு ரஜினிகாந்த் பகிரங்க ஆதரவு!
Publish Date: Fri, 22 Sep 2017 (10:50 IST)
Updated Date: Fri, 22 Sep 2017 (11:05 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என அவரது ரசிகர்கள் தீவிரமாக எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் அரசியலுக்கு வர உள்ள ரஜினி தனி கட்சி ஆரம்பிப்பாரா இல்லை பாஜகவில் இணைவாரா அல்லது வேறு ஏதாவது கட்சியில் இணைவாரா என பல யூகங்கள் வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்துக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. பிரதமர் மோடி சென்னை வந்த போது ரஜினியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்திருக்கிறார். பல நேரங்களில் பாஜக தலைவர்கள் ரஜினியை தங்கள் கட்சியில் சேர அழைப்பு விடுத்து வந்தனர்.
ஆனால் நடிகர் ரஜினி அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார். அரசியலுக்கு வரும் ரஜினி தனி கட்சி தொடங்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் திட்டம் ஒன்றுக்கு ரஜினிகாந்த் தனது பகிரங்க ஆதரவை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டையொட்டி தூய்மையே சேவை என்ற பரப்புரையை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், எனது முழுமையான ஆதரவை பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டத்துக்கு அளிக்கிறேன். தூய்மையே கடவுள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு திட்டத்துக்கும் தனது பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.