முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலை அனுப்பி அவமதிப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலை அனுப்பி அவமதிப்பு!
Publish Date: Thu, 21 Sep 2017 (09:19 IST)
Updated Date: Thu, 21 Sep 2017 (09:49 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சபாநாயகர் தனபாலுக்கும் பார்சலில் சேலை அனுப்பி அவமதிப்பு செய்துள்ளனர் சிலர். இது தொடர்பாக 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் கட்சித்தாவல் தடை சட்டத்தை சுட்டிக்காட்டி தகுதி நீக்கம் செய்தார். இதனை பலவேறு கட்சியினரும் கண்டித்து வருகின்றனர்.
18 எம்எல்ஏக்கள் முதல்வருக்கான ஆதாரவை வாபஸ் பெற்று கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிறது ஆனால் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் உள்ள அரசியலை சாதாரண மக்கள் கூட புரிந்து கொண்டுள்ளனர்.
18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்துள்ள இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சபாநாயகர் தனபாலுக்கும் சிலர் பார்சலில் சேலை அனுப்பி அவமதிப்பு செய்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட 8 பேரும் ஈரோட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதற்கு முன்னர் ஓபிஎஸ் சசிகலா அணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது பல்வேறு களோபரங்கள் அரங்கேறியது.
அந்த நேரத்தில் சபாநாயகர் தனபால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் மேலும் சட்டசபையில் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கும் அந்த நேரத்தில் சிலர் சேலை, வளையல் போன்றவற்றை பார்சலில் அனுப்பி வைத்தனர். இந்த முறையும் சபாநாயகர் தனபாலுக்கு சேலை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.