Publish Date: Thu, 27 Apr 2017 (07:45 IST)
Updated Date: Thu, 27 Apr 2017 (07:51 IST)
விடுதலைப்புலிகளின் இயக்கத்தை ஆதரவு அளித்து கொண்டிருந்தாலும் வைகோவை ஆதரித்து இதுவரை நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதே இல்லை. இந்நிலையில் திடீரென தற்போது வைகோவுக்கு ஆதரவாக சீமான் குரல் எழுப்பியுள்ளார்.
கடந்த 2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க கோரி வைகோ கடந்த 20 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 'தமிழகத்தின் வாழ்வாதாரத்தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக, அனுபவங்கள் பல பெற்ற வைகோ இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம். எனவே, வைகோ மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். வைகோ விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்'