Publish Date: Mon, 05 Jun 2023 (15:28 IST)
Updated Date: Mon, 05 Jun 2023 (15:30 IST)
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்துள்ளது.
கோடை காலம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. தலைநகரான சென்னையில் வெயில் கடுமையாக வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை நாளன்று வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டில் வீசிய நிலையில் பலரும் மெரினா கடற்கரை உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளுக்கு படையெடுத்தனர்.
இந்நிலையில் இன்ப அதிர்ச்சியாக தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது. வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
அடிக்கும் வெயிலுக்கு நடுவே திடீரென பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.