திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்று இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
தீபம் ஏற்ற அரசு எந்த தடையையும் விதிக்கவில்லை. 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, புதிதாக வேறு இடத்தில் ஏற்றக் கோருவதே பிரச்சினை. 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படியே அரசு செயல்படுகிறது.
புதிதாக கோரப்படும் இடம் தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே அனுமதி மறுக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.