நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் கட்சித் தலைவராக மாறிவிட்டார். மேலும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். குறிப்பாக திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது தவெகவின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஏனெனில் கரூர் சம்பவத்தை வைத்து விஜயின் மீதும், தவெகவினர் மீதும் திமுகவினர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்கள். தற்போது இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஒருபக்கம் திமுகவை தோற்கடிக்க விஜய் விரும்பினால் அவர் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதேபோல் அதிமுக அமைச்சர்களும் இதை சொல்லி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் விஜய் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்.
தவெக தனித்து போட்டியிட்டால் வாக்குகள் பிரியும். அது திமுக வெற்றி பெறுவதற்கு உதவும். எனவே அந்த முடிவை விஜய் கைவிட்டுவிட்டு அவர் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் விஜய் தனித்தே போட்டியிடுவார் என கருதப்படுகிறது.
இந்நிலையில்தான் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பீகார் தேர்தல் புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு ஒரு அடியை கொடுத்திருக்கிறது. பிரசாந்த் கிஷோரை போல் தம்பி விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார். பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி மரண அடி வாங்கியது. ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெறவில்லை. எனவே தனித்து போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் நிலைமைதான் விஜய்க்கும் என்பதை மறைமுகமாக தமிழிசை சொல்லி இருக்கிறார். மேலும், சகோதரி பிரேமலதா நல்ல முடிவை எடுப்பார் எனவும் அவர் கூறினார்.