Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மாலை 2 மணிக்கு திறந்தால் என்ன சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருந்த நேரத்தை, ஜெயலலிதா நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றியமைத்தார். தற்போதும் இதுவே நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு அருகில் உரிமம் பெறாமல் பார்கள் செயல்படுவதாகவும், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கிறதா என சோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக்கை 2 மணிக்கு திறந்தால் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதேபோல், மதுக்கடை பார்களில் உணவுப்பொருட்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு திறப்பதில் என்ன கொள்கை முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி இதுபற்றி தமிழக அரசு பதில் தர அவகாசம் கொடுத்து, இந்த வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.