பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 1 மற்றும் 2-ஆம் கட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, 118.9 கி.மீ நீளத்திலான புதிய 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிகள் தற்போது முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளத்திற்கு மேல், போரூர் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இம்மாத இறுதியில், 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ தூரத்திற்கு நடக்கவுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி 2.5 கி.மீ தொலைவுக்கு முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்துக்குள் செயல்பாட்டிற்கு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.