Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் தமிழக வாழ்விரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை வேல்முருகன் நேரில் சென்று நேற்று ஆறுதல் தெரிவித்தார். 144 தடை அமலில் இருக்கும்போது வேல்முருகன் மக்களை சந்தித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வேல்முருகனை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்த போலீஸார் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேல்முருகன், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புழல் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.