வங்கக்கடலில் நிலவிய 'டிட்வா' புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள வட மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. இந்த தொடர் மழை காரணமாக சென்னைக்கு நீர் வழங்கும் பிரதான ஏரிகளான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், மற்றும் சோழவரம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,200 கன அடியிலிருந்து 4,167 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடியிலிருந்து 1,444 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு 2,100 கன அடியிலிருந்து 2,500 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால், புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.