Publish Date: Tue, 17 Apr 2018 (11:41 IST)
Updated Date: Tue, 17 Apr 2018 (11:47 IST)
கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ பேச்சு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ்தான் செயல்படுகிறது. அப்படியிருக்க, பல்கலைகழக மேல்மட்ட அதிகாரிகளுக்கு கல்லூரிப் பெண்களை ஏற்பாடும் செய்யும் ஒரு இடை நிலைத்தரகர் போல் நிர்மலா தேவி பேசியிருப்பது கல்லூரிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது.
மேல்மட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், இளம் கல்லூரி மாணவிகளை தங்கள் வலைக்குள் கொண்டு வர நிர்மலா தேவி போன்ற பேராசிரியர்களை பயன்படுத்தி வருவது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு நிர்மலா தேவி பேசிய ஆடியோதான் வெளியாகியுள்ளது. பல நிர்மலா தேவிகள் இருக்கிறார்கள். இதற்கு முன் அவர்கள் பல மாணவிகளிடம் பேசியிருப்பார்கள். இப்போதும் பேசிக்கொண்டிருப்பார்கள். உயர் கல்வி மதிப்பெண், கல்லூரிக்கு வர தேவையில்லை. மாதம் மாதம் சம்பளம் என சலுகைகளும், மதிப்பெண்களும், வறுமைகளும் குறி வைக்கப்படும். இதில் எத்தனை மாணவிகள் பலியானார்கள் என்பது தெரியவில்லை.
தற்போது நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2வது நாளாக இன்று அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிகார மட்டம் சம்பந்தப்பட்டிருப்பதால் உண்மை வெளிவருமா என்பது சந்தேகமே!
நிர்மலா தண்டிக்கப்படுவதைப் போன்றே, அவரை இயக்கிய அந்த உயர் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.. ஏனெனில் அதிகாரிகளை தண்டிக்காமல் விட்டால் இன்று நிர்மலாவை உருவாக்கியது போல, நாளை வேறு நிர்மலாக்களை உருவாக்கிவிடுவார்கள்..
இவர்களைப் பொறுத்தவரையில் நிர்மலா இல்லை என்றால் மாலா என்று மற்றொரு ஆப்ஷனை நோக்கி நகர்வார்கள். இந்தச் சமூகத்தில் தங்களின் விடுவித்துக்கொள்ள முடியாமல் பல நிர்மலாக்கள் இருக்கின்றனர். அவர்களை உருவாக்கியதே இந்த அதிகார அமைப்புகள் தான்..
இப்படிப்பட்ட நிர்மலாக்கள் உருவாக அடிப்படை காரணமாக இருக்கும் இந்த அதிகார அமைப்புகளை உடைக்காத வரை இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுக்க வழியில்லை..
எனவே அடிப்படை மாற்றத்தினை நோக்கி நகர்வோம், அதுவே சரியான நிரந்தரமான தீர்வாக இருக்கும்..
webdunia
Publish Date: Tue, 17 Apr 2018 (11:41 IST)
Updated Date: Tue, 17 Apr 2018 (11:47 IST)