Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
மனிதர்களோடு கடவுள் உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.
நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
நமது சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுவதுதான் பல்லி அல்லது கௌரி சாஸ்திரம். நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நமது நேரத்தை பற்றியும், நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும். இது ஒருவகையான அடையாளச் செய்தியாக அறியப்படுகிறது.
நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது. இது கடவுளிடம் இருந்து நல்லது மற்றும் கெட்டது நடக்கவிருக்கும் செயல்கள் குறித்த செய்திகளை மனிதர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறது என்று கருதப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி கோவிலில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இதை தொட்டு வணங்குவது சிறப்பிற்கு உரியதாக கருதப்படுகிறது. இந்த பல்லிகள் இரண்டும் காந்தர்வர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இறைவனிடம் வரம்பெற்று இக்கோயிலை கட்ட உதவினார்கள் என்ற கூற்றுகளும் நிலவி வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது. கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் மங்களகரமான செயல் அல்லது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நமது பாரம்பரியத்தில் என்ன காரணம் கூறியிருந்தாலும், பல்லிகள் நமது வீடுகளில் அமைதியாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். இவை வீட்டில் இருக்கும் நச்சுப் பூச்சிகள் கொன்று நமக்கு நல்லதை தான் செய்கின்றன.