Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
ஆவணி மாதத்தில் சூரிய பலம் அதிகமாக இருப்பதால், முப்பது நாட்களிலும் அதிகாலையில் கீழ்க்கண்ட சூரிய கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும். சோர்வில்லாத வாழ்வு அமையும்.
காசினி இருளை நீக்கிக் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்க
வாசி ஏழுடைய தேரின்மேல் மகா கிரிவலமாகி வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி! போற்றி!
என்று சூரியனுக்குரிய பாடல் எடுத்துரைக்கின்றது. காசினி என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகின் இருளைப் போக்கி ஒளியைப் பாய்ச்சும் ஒரே கிரகம் சூரியன் தான்.
எனவே இருள்மயமான வாழ்வு அமைந்தவர்களும், ஒளிமயமான வாழ்வு அமைய விரும்புபவர்களும் இந்த ஆவணி மாதம் முழுவதும் இல்லத்தில் சூரியனை வழிபடுவதோடு, சூரியனுக்குரிய ஆலயமான சூரியனார் கோவில் சென்றும் வழிபட்டு வரலாம்.
கண்ணிற்கு பலம் கூட்டுவது சூரிய ஒளி என்பர். அதனால் காலையில் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதோடு, மாலையில் சூரியக்குளியல் செய்வதும் நமது ஆரோக்கியத்தைச் சீராக்கும்.
ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதமாகும் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்களைப் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக மாறும். கண்நோய் நீங்கும், புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.