இந்திய அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டை அவரது தோல்விகளை கொண்டு மதிப்பிட வேண்டாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். 16 மாதங்களுக்கு பிறகு அணிக்குத் திரும்பிய ருதுராஜ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை 4வது இடத்தில் விளையாட வைத்ததற்கு ஆகாஷ் சோப்ரா இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்தார்.
அவரது யூடியூப் சேனலில் பேசிய சோப்ரா, "ருதுராஜின் முக்கிய பணி ஓப்பனிங் பேட்டிங் செய்வதே. அவர் 4வது இடத்தில் ஆடியதில்லை. அவருக்கு முழுமையாக மூன்று வாய்ப்புகள் டாப் ஆர்டரில் வழங்க வேண்டும். அதுவரை அவரது ஒருநாள் கிரிக்கெட் குறித்து தீர்ப்பளிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று கேட்டு கொண்டார்.
மேலும், மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளித்துவிட்டு, ரிஷப் பண்ட்டை புறக்கணித்த முடிவையும் சோப்ரா விமர்சித்தார். "ரிஷப் பண்ட் ஒரு உண்மையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். வாய்ப்பு இருந்தும் அவரை பயன்படுத்தாமல், அந்த இடங்களில் விளையாடாத வீரர்களை அணி நிர்வாகம் அனுப்புவது ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.