நடிகர் சந்தானம் நடித்த 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நாளை (மே 16) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற 'கோவிந்தா' என்ற பாடல் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பாடலில் திருப்பதி வெங்கடாசலபதியினை பக்தர்கள் பக்தியோடு அழைக்கும் கோவிந்தா என்ற வார்த்தையோடுக் கொண்டு ஒரு நகைச்சுவையான பாடலாக உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பாடல் திருப்பதி பெருமாளைக் கேலி செய்யும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் 'DD நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம்பெற்ற 'கோவிந்தா' என்ற பாடலை நீக்க வேண்டும் என்றும், இந்து மதத்தை அவமதித்ததற்காக ரூ.100 கோடி மானநஷ்டஈடு கொடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்குப் பதிலளித்துள்ள சந்தானம் “நானே பெருமாள் பக்தன்தான். ஆண்டுதோறும் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை நடந்தே செல்வான். பெருமாள் பற்றிய ஒரு வார்த்தை என் படத்தில் இருந்தால் செண்ட்டிமெண்ட்டாக அந்த படம் வெற்றி பெறும் என்பதால்தான் அந்த பாடலை வைத்தோம். இந்த படம் வெற்றி பெற்றால் நானும் இயக்குனரும் திருப்பதிக்கு சென்று வழிபடுவோம்” எனக் கூறியுள்ளார்.