Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடிக்கு சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். பெரும்பாலான தூத்துகுடி மக்கள் ரஜினியின் வருகை தங்களுக்கு பெரும் ஆறுதல் என்று கூறிய நிலையில் சந்தோஷ் என்ற வாலிபர் மட்டும் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டார்.
இந்த வாலிபரை நெட்டிசன்கள் கொண்டாடினார். இவர்தான் உண்மையான, வீரமான தமிழர்கள் என்று போற்றினார். ஒருசில மீடியாக்கள் இவர் கேட்ட கேள்வியை வைத்து ரஜினியை டோட்டலாக டேமேஜ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டன.
இந்த நிலையில் ரஜினியை 'யார் நீங்க' என்று கேள்வி கேட்ட சந்தோஷ் தற்போது ஒரு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்களை பார்த்து 'யார் நீங்க' என்று நான் கேட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நான் சொல்ல வந்த நோக்கம் வேறு, ஆனால் மீடியாக்காரர்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் அதை வேற மாதிரி கொண்டு செல்கின்றனர்.
ரஜினிகாந்த் பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்து மனிதர். அவர் கடந்த 100 நாட்களில் ஒருநாள் வந்திருந்தால் எங்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் உலக அளவில் சென்றிருக்கும் என்ற ஆதங்கத்தில் தான் அவரை அவ்வாறு கேட்டேன். ஆனால் மீடியாக்காரர்கள் தங்களுடைய விளம்பரத்திற்காக வே'ற மாதிரி கொண்டு செல்கின்றனர். இது என்னை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது' என்று கூறியுள்ளார்.