Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு, ஏலக்காய் - சிறிதளவு
லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தக்காளியை நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலை பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி இந்த கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் வேகவைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து போட்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். சுவையான வடைகறி தயார்.