ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,124 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31 அன்று நள்ளிரவு, ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் நாங்கர்ஹார் மாகாணங்களில் ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி, நிலப்பரப்பிலிருந்து வெறும் 8 கி.மீ. ஆழத்தில் இருந்ததால், சேதம் அதிகமாக இருந்தது.
இதனால், குனார் மாகாணத்தில் மட்டும் 8,000க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,124 பேர் உயிரிழந்ததுடன், 3,521 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி அளிக்கும் வகையில், 1,000 குடும்பங்கள் தங்குவதற்கான கூடாரங்கள் உட்பட ஏராளமான நிவாரண பொருட்கள் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.