அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியா-அமெரிக்கா கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகள் இந்தியாவுடனான உறவுகளை பாதிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப்பின் ஈகோ காரணமாக, பலஆண்டுகளாக பலப்படுத்தப்பட்ட உறவு சிதைந்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் விதித்திருக்கும் 50% வரி, பிரேசிலை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகும். இது சீனா மீது விதிக்கப்பட்ட வரியைவிடவும் அதிகம்.
டிரம்ப்பின் இந்த வர்த்தக கொள்கைகள், இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை நோக்கித் தள்ளும் என்று ரோ கன்னா எச்சரித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பு அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கும், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கிறது.டிரம்ப்பின் ஈகோ, இந்தியா-அமெரிக்கா உறவை அழித்துவிட அனுமதிக்க முடியாது. உலகை அமெரிக்காதான் வழிநடத்துகிறது, சீனா அல்ல என்பதை உறுதி செய்ய இது மிகவும் முக்கியம்," என்று ரோ கன்னா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.