Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் திடீரென இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பின் இருதரப்பினரும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கிவிட்டனர். டிடிவி தினகரன் அணி மற்றும் எடப்பாடி அணி ஆகிய இருவரும் கட்சி மற்றும் ஆட்சி எங்களுக்குதான் சொந்தம் என கூறிவருகின்றனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்து வருகிறது. டிடிவி தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனால் தொப்பி சின்னத்தை தேர்தெடுப்போம் என தினகரன் அணியினர் கூறி வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிப்பெறுவேன் என தினகரன் கூறியிருந்தார்.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி தலைமையிலான அணிக்கு கிடைத்தால் அதிமுக அம்மா என்ற பெயரில் தனிகட்சி நடத்துவதில் உறுதியாக உள்ளனர் தினகரன் அணியினர். இந்நிலையில் தினகரன் இன்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.