Publish Date: Wed, 07 Mar 2018 (21:58 IST)
Updated Date: Wed, 07 Mar 2018 (22:03 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவரது மனைவி ஹஸின் ஜஹான் புகார் அளித்திருந்தார்.
ஷமியின் மனைவி கூறியதாவது, ஷமியின் நடவடிக்கைகள் கொடூரமானவை. அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர்.
எனது குடும்பம் மற்றும் மகள் காரணமாகவே என்னை நானே சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், தற்போது சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று பிசிசிஐ இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ்வளவு நாள் சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் மாறி மாறி இடம் பெற்று வந்த ஷமியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
ஷமியின் மனைவி புகார் அளித்த காரணத்தினால் பிசிசிஐ ஷமியை அணியின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதா என்ற சந்தேகம் வந்துள்ளது.