Publish Date: Mon, 14 Feb 2022 (14:39 IST)
Updated Date: Mon, 14 Feb 2022 (14:40 IST)
ரெய்னாவை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.
அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? அரசியலில் இறங்கப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் இல்லை, எனக்கு தெரிந்த விளையாட்டு கிரிக்கெட்தான். அரசியல் இல்லை. இப்போது எனக்கு சிறந்த சமையல் கலைஞராக ஆக வேண்டும் என்பதே விருப்பம். நான் இப்போது நன்றாக சமைக்கவும் செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.