Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது.
இதன் பூக்கள், காய்கள், தண்டு மற்றும் வேர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், அளப்பரிய மருத்துவ பலன்கள் மிக்கவையாக இருந்தாலும், இதன் வேரே, மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிவனார் வேம்புவின் பொதுவான குணங்களாக, உடல் எரிச்சல், கட்டிகள், நச்சுக்கள் இவற்றைப் போக்கி, உடலை வலிவாக்கும் ஆற்றல் மிக்கது.
அல்சர் எனும் குடல் புண்ணை சரிசெய்யும் ஆற்றல் மிக்க சிவனார் வேம்பு, பல்வேறு சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
சிவனார் வேம்பு செடியை தீயில் இட்டு, உண்டாக்கிய சாம்பலை, தேங்காயெண்ணையில் கலந்து, தலையில் ஏற்பட்ட சிரங்கு, உடலில் உள்ள சொறி சிரங்கு போன்றவற்றில் தடவி வர, அவை விரைவில் சரியாகும்.
உடலில் ஏற்படும் கட்டிகள், காயங்கள், சொறி சிரங்கு படை போன்ற சரும பாதிப்புகளுக்கும் தடவி வர, அவை விரைவில் குணமாகும். மேலும், அழுகிய நிலையில் உள்ள புண்கள், நாள்பட்ட காயங்களையும் ஆற்றும் வல்லமை மிக்கது.
கைப்பிடி அளவு சிவனார் வேம்பு இலைகளை நன்கு அலசி, நீர் போக உலர்த்தி, அந்த இலைகளை நன்கு மையாக அரைத்து, உடலில் ஏற்படும் கட்டிகளின் மீது தடவி வர, கட்டிகள் யாவும் உடைந்து விடும், சிலருக்கு கட்டிகள் உடையாமலேயே குணமாகி, மறைந்து விடும்.