Publish Date: Fri, 10 Aug 2018 (15:18 IST)
Updated Date: Fri, 10 Aug 2018 (15:23 IST)
வாட்ஸ் ஆப்பில் போலி செய்திகள் அதிகம் பகிரப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனால், போலி செய்திகள் பரவமால் தடுக்க வாட்ஸ் ஆப் சில நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளையும் விதித்தது.
இருப்பினும் வாட்ஸ் ஆப் பாதுகாப்பானது அல்ல என்பது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், இதனை நிரூபிக்கும் விதமாக செக்பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அதன்படி வாட்ஸ் ஆப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல்.
செக் பாய்ண்ட் கண்டறிந்த பிழைகள்:
1. ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.
2. க்ரூப்-ல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.
3. தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும்.