Publish Date: Fri, 02 Jun 2023 (08:44 IST)
Updated Date: Fri, 02 Jun 2023 (08:46 IST)
வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் மிகவும் விஷேஷம் மிகுந்த நாளாகும். இந்த நன்நாளில் இஷ்ட தெய்வங்களை வேண்டி வழிபடுவது சகல நன்மைகளையும் அளிக்கும்.
வைகாசி மாதம் முருகன் அவதரித்த தினமாதலால் முருகபெருமானுக்கு உகந்த நாளாக உள்ளது. இந்த வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் நாளில் வரும் வைகாசி விசாகத்தின்போது முருக பெருமானை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் குறைகள் நீங்கி மகிழ்ச்சி செழிக்கும்.
அதேபோல வைகாசி மாத பௌர்ணமி நாள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை, பௌர்ணமி வரும் நிலையில் வைகாசியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பௌர்ணமி நடக்கும். இந்த 2023ம் ஆண்டில் வைகாசி பௌர்ணமி ஜூன் 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்களிலும் நிகழ்கிறது.
இந்த பௌர்ணமி நாட்களில் அதிகாலை எழுந்து குளித்து விரதம் இருந்து இஷ்ட தெய்வங்களை வழிபடுவது தெய்வங்களின் பரிபூரண ஆசியை கிடைக்க செய்கிறது. வைகாசி பௌர்ணமியில் சந்திர தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
வைகாசி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோவில்களில் உள்ள தெய்வங்களை வழிபட்டு கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் முருகபெருமானுக்கு நிவேதியம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது சால சிறந்தது.
Prasanth Karthick
Publish Date: Fri, 02 Jun 2023 (08:44 IST)
Updated Date: Fri, 02 Jun 2023 (08:46 IST)