Publish Date: Mon, 05 Apr 2021 (12:45 IST)
Updated Date: Mon, 05 Apr 2021 (12:48 IST)
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது எல்ஜி நிறுவனம்
கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி நிறுவனம் திடீரென ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் ஸ்மார்ட்போன் உள்பட பல்வேறு பொருள்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாகவும் மற்றும் வர்த்தகத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளது
ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தால் தொடர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் காரணமாக வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் நடப்பாண்டில் மட்டும் இந்நிறுவனத்திற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து எல்ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே விற்பனை செய்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என்றும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது