Publish Date: Wed, 17 Oct 2018 (14:06 IST)
Updated Date: Wed, 17 Oct 2018 (19:32 IST)
முகநூலில் அறிமுகமான மாடல் மற்றும் நடிகையை அடித்துக்கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் வைத்து புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், கையில் ஒரு சூட்கேஸோடு வாடகை காரில் ஏறிய ஒரு வாலிபர் தான் விமான நிலையம் செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். ஆனால், காரை வேறு பக்கம் ஓட்ட சொன்ன அவர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு வைத்திருந்த சூட்கேஸை புதரில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த கார் ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த இடத்தில் போலீசார் விசாரனை செய்த போது, சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சிசிடிவி கேமரா மூலம் சோதனை செய்ததில், சூட்கேஸை வீசி விட்டு சென்ற அந்த வாலிபர், சிறிது தூரம் நடந்து சென்று ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்ற வாலிபர், அதன்பின் வேறொரு காரில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் அவரின் பெயர் முசாமில் சையத் என்ற கல்லூரி வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண், பாலிவுட்டில் சிறு சிறு வேடங்களில் நடித்த மான்சி தீக்சித் என்பதும், முகநூல் மூலமாக சையத்திற்கு பழக்கமானவர் என்பதும் தெரியவந்தது.
முசாமை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் மான்சி. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மான்சியை இரும்பு நாற்காலியால் சையத் தாக்கியுள்ளார். இதில், மான்சி மரணமடைந்தார். எனவே, அவரது உடலை சூட்கேஸில் வைத்து புதரில் வீசியதை சையத் ஒத்துக்கொண்டார்.
அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.