Publish Date: Mon, 26 Mar 2018 (18:55 IST)
Updated Date: Mon, 26 Mar 2018 (18:59 IST)
கர்நாடக மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸே ஆட்சி அமைக்கும் என சி-ஃபோர் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த சித்தராமய்யா முதல்வராக இருக்கிறார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே, எதிர்கட்சியான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் அனைத்து கட்சிகளும் அடுத்த தங்களின் ஆட்சியை அமைக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக வேட்பாளராக எடியூரப்பாவும், ம.ஜ.த வேட்பாளராக குமாரசாமியின் பெயரும் அடிபடுகிறது.
இந்நிலையில், சி-ஃபோர் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 46 சதவீத வாக்குகளை பெறும் எனவும், பாஜக 31 சதவீத வாக்குகளை பெறும் எனவும், ம.ஜ.த வெறும் 16 சதவீத வாக்குகளை பெறும் எனவும் கூறியுள்ளது. அதோடு, காங்கிரஸ் 126 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமிக்கும் எனவும் கூறியுள்ளது. அதே நேரம் பாஜகவிற்கு 2வது இடத்திற்கு முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் கூறியுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 119-120 தொகுதிகளில் வெற்றி பெறும் என சி-ஃபோர் அமைப்பு கூறியிருந்தது. அதேபோல், 122 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக்கணிப்பு பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.