Publish Date: Wed, 06 Sep 2017 (23:59 IST)
Updated Date: Wed, 06 Sep 2017 (23:52 IST)
நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் உடல், அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கெளரியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் ராஜ ராஜேஸ்வரி நகரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் வசித்து வந்தார். நேற்று மாலை அவரது இல்லத்திற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டனர். இதில் 7 குண்டுகள் அவரது உடலை துளைத்ததால் உயிரிழந்தார்.
கௌரியின் படுகொலை குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பெங்களூரு ரவீந்திரா கலாக்சேத்ரா கலாச்சார மையத்தில் கௌரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு, அரசு மரியாதை உடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.